ஞாயிறு, 12 அக்டோபர், 2014

ஜீவா


எனக்கு மனதை பாதித்த படங்கள் சில அதுல குறிப்பா சொல்லனும்ன்னா அங்காடி தெரு, சாட்டை இப்போ இந்த படம். 

அப்படி என்ன தாங்க இந்த படத்துல இருக்குன்னு கேக்குறீங்களா. காதல் - ஆமாங்க காதல் படம் தான், நட்பு - ஆமாங்க நண்பர்கள் பத்தின படம் தான், அப்பா செண்டிமெண்ட் - இருக்குங்க, அம்மா செண்டிமெண்ட் - இருக்குங்க, சகோதர பாசம் - இருக்குங்க, சமூக பார்வை - சாட்டைக்கு அடுத்து சாட்டையடியான படங்க, இசை - இமான் கலக்கிருக்காருங்க, காமெடி - ரொம்ப இல்லைனாலும் ரெட்டை அர்த்தங்கள் இல்லாம சிரிக்கிற மாதிரி இருக்குங்க, சண்டை - ஒரு ஆள் ஆயிரத்து ஐநூறு பெற அடிச்சு பறக்கவிடுற மாதிரி கேவலமான சண்டை மட்டுமில்ல வேற எந்த ஒரு அடி தடி சண்டையும் இல்லை, கவர்ச்சி - ஏய் யாரபார்த்து இந்த கேள்வி கேக்குற ஏதோ அந்த ஸ்ரீ வித்யா புள்ளை தான் கொஞ்சம் ஒழுங்கா நடிக்குது அது பொறுக்கலையா உனக்கு.

படம் ஆரம்பிக்கும்போது சின்ன பையனா வரும் ஜீவா கொஞ்ச நேரம் தான் வந்தாலும் நம்ம சின்ன வயசு ஞாபகத்தை கொஞ்சம் அப்படியே திரும்ப வர வச்சுட்டு போயிடுறான். அவன் ஒரு ஸ்போர்ட்ஸ் கடைல போய் பேட் விலை விசாரிச்சுட்டு பந்து வாங்கிட்டு வர்ற சீன பார்க்கும் போது நம்ம சின்ன வயசு பிளாஷ்பேக் நம்மள அறியாமலே மனதுக்குள்ள ஓடும். 

அடுத்து டீன்னேஜ் ஜீவா அவன் சின்ன வயசுல எந்த அளவுக்கு கிரிக்கெட்ட நேசிச்சானோ இப்பவும் அதே பிடிப்போட அவன் பள்ளிக்கு விளையாடுறான். எல்லா நடுத்தர மக்கள் வீடுகள் போலவே ஜீவாவோட அப்பாவும் கிரிக்கெட் ஒரு பணக்கார விளையாட்டு நமக்கு வேணாம்ன்னு முதல் முட்டுகட்டை போடுறாரு. அதுகூட உண்மை தான் கிரிக்கெட் விளையாடனும்ன்னா ஒரு நல்ல கோச்கிட்ட போய் கோச்சிங் சேரனும் அதுக்கு தேவையான அத்தனை விளையாட்டு மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் எல்லாம் வாங்கணும். சும்மாவா கிடைக்கும்.

இந்த சமையத்துல கதாநாயகி ஜெனிய சந்திக்கிறான் ஜீவா காதல் அப்பறம் வீட்டுக்கு தெரிஞ்சு மோதல். பள்ளிக்கூடம் படிக்கிற வயசுல என்ன காதன்னு அறிவுரை அதற்கப்பறம் ஒரு பிரிவு. காதலியின் பிரிவை தாங்க முடியாம இருக்க பையனுக்கு அவனுக்கு புடிச்ச கிரிக்கெட்ட மறுபடி கொடுக்கிறார் அப்பா. 

நண்பன் ரஞ்சித்த சந்திக்கிறான் ஆரம்பத்துல ரெண்டு பேருக்கும் ஒத்து வரலைனாலும் போக போக ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஆகிடுறாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து சிறப்பா விளையாடறாங்க. இங்க தான் நம்ம சூரி படத்துல சீனியரா அறிமுகம் ஆகுறாரு படம் கலகலக்குது. மறுபடி ஒரு சின்ன காதல் முக்கோண காதல். அப்பறம் நட்புக்குள்ள அந்த காதல் காணமல் போகுது. 

இந்தியன் கிரிக்கெட் டீம்குள்ள நுளையுறதுக்கு முன்னாடி எத்தனை எத்தனை வெற்றிகள பெறனும் எவ்வளவு தடைகள் இருக்கும் இதெல்லாம் கோச் சொல்றாரு. எதிர்பார்த்தது போலவே நண்பர்கள் இருவரும் சிறப்பா ஆடி அடுத்தடுத்த போட்டிகளுக்கு தேர்வாகி கடைசில ரஞ்சிட்ரோபி வரைக்கும் வந்திடுறாங்க. இங்க தான் ஜாதி அரசியல் உள்ள நுழையுது. தமிழகத்துல இருந்து இந்திய அணிக்கு தேர்வாகுற எல்லா வீரர்கள்  மட்டுமில்லை தமிழக கிரிக்கெட் கமிட்டில வேலை செய்ற பியூன்ல இருந்து தலைவர் வரைக்கும் ஒரே ஜாதிய சேர்ந்தவங்க தான். இருந்தாலும் எப்படியாவது நமக்கு கிடைச்ச வாய்ப்ப பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேரனும்ன்னு நம்ம்பிகையோட நண்பர்கள் இருவரும் ரஞ்சிட்ரோபி களத்துக்கு வராங்க. முதல் வருஷம் ஒரு மேட்ச் கூட வாய்ப்பே கிடைக்காம தண்ணி பாட்டில தூக்கி கொண்டு போய் குடுத்தே முடிஞ்சுருது. அடுத்த வருஷம் பேருக்கு ரெண்டு மேட்ச் ஆட விட்டு உக்கார வச்சிராங்க. மூணாவது வருஷம் இவங்களுக்கு ஆவரேஜ் பத்தலன்னு சொல்லி இவங்கள  ரஞ்சிட்ரோபி டீம்லையே எடுக்காம வெளியேத்துறாங்க. இது எல்லாமே அப்பட்டமான ஜாதி அரசியல்ன்னு புரிஞ்சுகிட்ட நண்பர்கள் தங்களுக்கு ஞாயம் கேட்டு போறாங்க. எல்லாமே ரூல்ஸ் படி தான் நடக்குது உங்களுக்கு ஆவரேஜ் இல்லைன்னு சொல்லி கழுத்தை புடிச்சு வெளிய தள்ளிடுராணுக. விளையாண்டு தோத்தாலும் பரவாயில்லை வாய்ப்பே கிடைக்காம தோத்து போறோமேன்னு ஜீவா சொல்லும் வசனம் பல ஜீவாக்களின் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

இந்த நண்பர்கள் மட்டுமில்லை இதே போல எவ்வளவோ நண்பர்கள் இவர்கள் ஜாதி வெறிக்கு பலியாகி அவர்கள் கனவு வாழ்க்கை எல்லாத்தையும் இழந்து ஒரு நடைபிணமா ஏதோ ஒரு வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருப்பாங்க. சிலர் பிணமாவே ஆகிடுவாங்க. அப்படி ரஞ்சித்தும் பிணமா ஆகிடுறான். ஜீவா நடைபிணமா ஆகிடுறான்.  

இடைல ஜீவா தன்னோட பழைய காதல்யும் மறுபடி உயிர் பெற வக்கிறான். முன்ன இருந்த அதே தடை தான் இப்பவும் இருக்கு அவனுக்கு வேலையில்லை பொண்ணோட அப்பா நான் வேலை வாங்கி தரேன்னு சொல்றாரு. தன்னால கிரிக்கெட்ட விட்டு வெளிய வராம தவிக்கிறான் ஜீவா.

படத்தை ரொம்ப சோகமா முடிக்க கூடாதுன்னோ என்னவோ இயக்குனர் ஜீவாக்கு சிபிஎல்ல (ஐபிஎல்ல உல்ட்டா பண்ணிருக்காரு) ஜீவாக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சு அது மூலமா ஜெயக்கிற மாதிரி முடிச்சிருக்காரு. அப்படி ஜீவா வெற்றி பெற்று சிபிஎல் மைதானத்துல இறங்குரபோ கூட நம் கண்களில் கண்ணீர் தான் வரும் இந்த கேடுகெட்டவர்களை நினைத்து.

என்னை பொருத்தவரைக்கும் இப்படி பல ஜீவாக்கள் தங்கள் காதல் நட்பு கனவு வாழ்க்கை எல்லாத்தயும் தொலைச்சுட்டு ஒரு நடைபிணமாக தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்போ கிரிக்கெட்ட எடுத்து பார்தீங்கன்ன கூட தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு ஐபில் மேட்சுல கூட இந்த மாதிரி ஜீவக்களுக்கு இடம் கிடைக்காமல் முட்டுக்கட்டை போட்டு இவர்கள் இருப்பதையே வெளி உலகுக்கு தெரியாமல் செய்துவிடுவார்கள் இந்த ஜாதி சாணக்கியர்கள்.

இந்த படம் கிரிக்கெட் பற்றியதால் கிரிக்கெட்டில் மட்டும் இப்படி நடக்கிறது என்று இல்லை. எல்லா விளையாட்டிலும் இப்படி பல ஜீவாக்கள் புறக்கணிக்க பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.

படம் விமர்சனம் என்று ஆரமித்து ஏதேதோ சொல்ல ஆரமித்துவிட்டேன். படத்தின் தாக்கம். கண்டிப்பாக சமூக அக்கறையுள்ளவர்கள் பார்க்கவேண்டிய படம்.

ஜீவா - இனி ஒரு விதி செய்வோம்... இப்படி பல ஜீவாக்கள் தங்கள் வாழ்க்கையை தொலைக்காமல் தடுப்போம்....

இப்படி ஒரு படத்தை தந்த இயக்குனர் சுசீந்திரனுக்கு நன்றிகள். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக