ஞாயிறு, 26 அக்டோபர், 2014

கத்தி


இந்த படத்தை எதிர்த்த பல்லாயிரக்கணக்கானவர்கள்ள நானும் ஒருத்தன். இந்த படத்தைன்னு சொல்றத விட இந்த படத்தோட தயாரிப்பளர. அப்பறம் ஏதோ எப்படியோ சரிகட்டி படத்தை வெளிவிட்டுடாங்க. அதை பத்தி இங்க நம்ம ரொம்ப ஆராய்ச்சி பண்ண வேண்டாம். இந்த படத்தை பாக்கவே கூடாதுன்னு ஒரு முடிவுல இருந்தேன். அப்பறம் படம் வெளி வந்ததுக்கு அப்பறம் படத்தை பத்தி ஒரு ஹைப் உருவாச்சு அந்த ஹைப்ல தான் பல பேர் இப்போ படத்தை பார்த்துகிட்டு இருக்காங்க அதுல ஒருத்தன் தான் நான். இந்த ஹைப் கிட்ட தட்ட விஸ்வரூபம் படத்துக்கு உருவான அதே ஹைப் தான்.

படத்துல ப்ளஸ்ன்னா அவங்க சொல்லிருக்க கருத்து தான். அதை ரொம்ப அழுத்தமா திருத்தமா சொல்லிருக்காங்க. நம்ம நாட்டோட முதுகெலும்பு கிராமங்கள்ன்னு காந்தியடிகள் சொன்னாரு அந்த கிராமங்களோட முதுகெலும்பே விவசாயம் தான். இப்போ அந்த முதுகெழும்ப எப்படி கார்பரேட்காரன் ஒடிச்சுகிட்டு இருக்கான். அதுக்கு எந்த எதிர்ப்புமே தெரிவிக்காம இதை ஒரு கிராமத்தான் பிரச்சனை என்பது போல நகரத்தில் உள்ள நாம் நினைத்துக்கொண்டு எப்படி கார்பரேட் கம்பெனிகளுக்கு நம்மை அறியாமலே நாம் ஆதரவாக இருக்கிறோம்ன்னு சொல்லிருக்காங்க.

படத்துல ரெண்டு விஜய் ஒருத்தரு ஜீவானந்தம் ஒருத்தரு கதிரேசன். கிட்டத்தட்ட பழைய எம்ஜிஆர் பாணி தான் ஒருத்தர் வீரர் சூரர் இன்னொருத்தர் கோழை. கதிரேசன் திருடன் தண்டனை கைதி வீரன். கொல்கொத்தா ஜெயில்ல இருந்து தப்பிச்சவன் நேர சென்னைக்கு வரான். அங்க இருந்து பாங்காக் போக ஏற்பாடு பண்ணி ஏர்போர்ட்ல அன்கிதாவ (அதாவது சமந்தாவ) பாக்குறான். அவ எதோ பொய்யா இதான் என் நம்பரு நீங்க இந்தியாவுல இருந்தா உங்கள தான் கட்டிக்குவேன்னு சொல்லிட்டு போக. உடனே அந்த பொய்ய நம்பி நம்மாளு கதிரேசன் சென்னைல இருந்து அந்த பொண்ண பிக்கப் பண்ணலாம்ன்னு முடிவு பண்றாரு. என்னங்கடா இது ஜெயில்ல இருந்து தப்பிச்ச ஒருத்தன் போலிஸ் தேடிகிட்டு இருக்கு மாட்டுன மறுபடி புடிச்சு ஜெயில்ல போட்டிருக்வாங்க இப்போ இவன் லவ் பண்ணி என்ன பண்ணபோறான் அதுவும் அந்த பொண்ணு உண்மை தான் சொல்லுச்சான்னே தெரியல இவள நம்பி சென்னைலயே இருக்கபோறான்னான்னு நீங்க லாஜிக் சிந்திக்கிற ஆளா இருந்தா இந்த படம் பூராம் நீங்க சிந்திச்சுகிட்டே தான் இருக்கணும்.

சரி கதைக்கு வருவோம். தப்பிச்ச கத்தி என்கிற கதிரேசன் ஒரு சந்தர்பத்துல இவரு மாதிரியே இருக்க ஜீவாவ ஒரு கொலை முயற்ச்சில இருந்து காப்பாத்தி அந்த சந்தர்பத்த தனக்கு சாதகமா பயன்படுத்தி ஜீவாவ கொல்கொத்தா ஜெயிலுக்கு அனுப்பிட்டு தான் ஜீவா மேற்பார்வைல இருந்த முதியோர்  இல்லத்துல தான் தான் ஜீவான்னு போயிடுறாரு. சிலபேர் கத்திய ஜீவான்னு நினைச்சு பல லட்சங்கள் கோடிகள் குடுத்து உங்க ஆசிரமத்துல இருக்க பெரியவங்க பத்து பேர்கிட்ட கையெழுத்து வாங்கித்தா இன்னும் நிறைய தரோம்முன்னு சொல்லறாங்க. பணத்தாசை புடிச்ச கத்திக்கும் எப்படி ஜீவாவோட உணமையான கதை தெரிய வருது அதற்கப்பறம் கத்தி எப்படி ஜீவாவோட இடத்துல இருந்து ஜீவா செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடிக்கிறார்ங்கறது மீதி கதை. படத்துல விவசாயத்தை பத்தியும் நம்ம ஊர்ல நடக்குற கார்பரேட் கொள்ளைகள் பத்தியும் நாட்டில் நடக்கும் சில ஊழல்கள் சில பண முதலைகளின் அடாவடிகள் பற்றி சொல்லும் வசனங்கள் நாம் அடிக்கடி சமூக வலைதளங்களில் படித்த விசயங்களாக இருந்தாலும். கத்தியாக விஜய் பேசிய போது இன்னும் அழுத்தமாகவும் அனேக மக்களை சென்றடைய ஏதுவாகவும் இருக்கும்.

ஜீவானந்தம் பத்தி சொல்லனும்ன்னா படத்துல இவர விட சமந்தா அதிக காட்சிகள்ள வராங்க ஆனாலும் ஊரு உலகமே ஜீவனத்ததை பத்தி தான் பேசுது. அதுக்கு காரணம் இவர காப்பதுறதுக்காக ஆறு பெரியவங்க மொத்தமா தற்கொலை பண்ணி அதை வீடியோ எடுத்து செய்தியா பரப்புறது தான். அதுக்கு முதல்ல ஜீவாவ ஏன் காப்பாத்தனும்ன்னு சொல்லிடறேன் அதாவது தன்னூத்துன்னு ஒரு கிராமம் அந்த கிராமத்து இளைஞன் தான் ஜீவானந்தம். அவரு ஒரு ஹைட்ரோலோஜி படித்தவர் தன் கிராமத்துல இருக்க மிக பெரிய ஊத்தை கண்டுபிடிக்கிறாரு. அந்த ஊத்து இருந்த இடத்தை வில்லன் அவன் வில்லத்தனத்தின் மூலம் தன்னோட கார்பரேட் கம்பெனிக்காக ஆக்கிரமிச்சுரான். இதை எதிர்த்து கேட்ட மக்களுக்கு விவரங்கள் சொல்லுவது ஜீவா தான்னு தெரிஞ்சு அவன கைது பண்ணி ஊறவே மிரட்டுறாங்க. இந்த விஷயத்தை மீடியா மூலம் வெளில கொண்டு வந்து ஜீவாவ காப்பாத்த தான் பெரியவர்கள் தற்கொலை செய்துகொண்டாங்க. இப்படி பெரியார்களின் தியாகம் மற்றும் கத்தியின் அதிரடி சரவெடி நடவெடிக்கைகள் மூலம் இறுதியில் கிடைக்கும் வெற்றி என அத்தனை தியாகங்களுக்கும் மூலகாரணமாக பார்க்கப்படும் ஜீவானத்திற்கு படத்தில் பெரிய முக்கியத்தும் கொடுக்காதது ஏன் என்று புரியவில்லை. குறைந்தது கத்திக்கு கொடுத்ததில் ஒரு பாதி முக்கியத்துவமாவது கொடுத்திருக்கலாம்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் கத்தியை வில்லன்கள் சதக் சதக் என குத்தும் போது கதாநாயகி இருந்திருந்தால் கூட ஒரு கல் எடுத்து எறிந்திருப்பாள் இல்லை ஓடிப்போய் வில்லன் கையாவது கடித்து வைத்திருப்பாள். என்னதான் ஜீவா சண்டை தெரியாதவராக இருந்தாலும் தன கிராமத்துக்காக ஊரை கூட்டி போராட தெரிந்த ஒரு போராளி. ஒரு கிராமத்துகாரர் வேறு பொதுவாக நகரத்தில் வசிப்பவர்கள் சில சந்தர்ப்பங்களில் நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கி போவார்கள். கிராமத்துகார்கள் இப்படி தனக்காக ஒருவர் அடிவாங்கி கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டாரகள். ஜீவாவை இந்த அளவு கோழையாக காமித்திருக்க தேவையில்லை.

ஜீவானந்தம் உடைய வில்லன் கார்பரேட் கம்பெனி ஓனர் முகேஷ் இவருக்கு பெரிய வில்லன் தோரணை இல்லை என்றாலும். ஒரு கார்பரேட் கம்பனி ஓனர் லுக் இருந்ததது. அவருக்கு கொடுத்த வேலையும் அவர் சரியா செய்திருக்கிறார். இவ்ளோ பெரிய கார்பரேட் ஓனர் கொடூரமான வில்லன்கிட்ட நான் மேல சொன்ன சண்டைன்னா என்னன்னே தெரியாத ஜீவாவ கொல்றத்துக்கு கூட ஒரு நல்ல ரவுடி இல்லாதது ஏன்னு தெரியல? இவருடைய காட்சிகள் எதுவம் அந்த அளவுக்கு மனசுல பதியல அதனால அப்படியே விட்ருவோம்.

கதாநாயகி எல்லா பாட்டுக்கும் வந்து நல்லா ஆடினாங்க சூப்பர். காமெடி விஜய் ஒரு ரெண்டு மூணு இடத்துல நல்லா பண்ணிருந்தாரு. சதீஸ் காமெடிக்கு படத்துல விஜய்யே நாளைக்கு வந்து சிரிக்கிறேன்ன்னு சொல்லுவாரு. அவரே அப்படி சொல்றப்போ நமக்கும் அப்படி தான் இருந்தது.

இசை தீம் இம்மார்டல்ஸ் ஆல்பத்தோட காப்பின்னு சொன்னாங்க இருந்தாலும் நாம இப்போ தானே முதல்ல கேக்குறோம். அதனால ரொம்பவே நல்லா ரசிக்கும் படி இருந்தது. எல்லா பாட்டுமே நல்லா இருந்ததுன்னு நான் சொல்ல வேண்டாம் நீங்களே நிறைய முறை கேட்டு இருப்பீங்க. பின்னணி சில இடங்களில் பின்னி எடுத்திருக்கிறார் மிக சில இடங்களில் தலை வலியும் ஏற்படுத்தி இருக்கிறார். என்ன இருந்தாலும் ரசிக்கும் படியான பாடல்கள் தந்ததிற்கு அனிருத்துக்கு ஒரு சபாஷ் போட்டே ஆக வேண்டும்.

படத்தில் மிக பெரிய பலம் அதன் மைய கருத்து மற்றும் அதனை சொல்லிய விதம் அதற்காக பயன்படுத்த பட்ட வசனங்கள். பலவீனங்கள் மற்றும் சொதப்பகள் இயக்குனர் தமிழக மக்கள் லாஜிக் என்றால் என்ன என்று தெரியாவதவர்கள் என்று நினைத்து விட்டதும். பல கதாபாத்திரங்களை எந்த முடிவும் இல்லாமல் அப்படி அப்படியே தொங்கலில் விட்டு விட்டுதும். உதாரணத்துக்கு ஒரு கலெக்டர் வந்து 25 லட்சம் பணம் தருவார் அவர் ஏன் கொடுத்தார் அவர் வில்லனின் ஆளா? கடைசியில் அவர் என்ன ஆனார்?  வில்லனை ஒரு காட்சியில் கூட சந்திக்கவோ பேசவோ இல்லையே? அடுத்து ஜீவாவை கொல்ல ஒரு கூட்டம் இருப்பது போல் கத்தியை கொல்லவும் ஒரு வில்லன் ஒரு கூட்டம் இருக்கிறது ? இவர்கள் என்ன ஆனார்கள்?

படம் மசாலா மாஸ் படம் என்பதற்காக கதாநாயகன் ஒரு மிக பெரிய போராட்டத்தில் ஈடு பட்டு கொண்டிருக்கும் போது. திடீரென்று ஒரு பிணத்தின் முன் கதாநாயகியுடன் குத்து பாட்டுக்கு நடனம் ஆடுவதெல்லாம் ரசிக்கும் படியாக இல்லை. திரைகதை பின் பாதியில் சற்று வேகமாக போனாலும் ஆரம்பத்தில் படு இழுவையாகவே இருந்தது.

ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருந்தாலும் அத்தனை ஓட்டைகளையும் அடைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட விவசாயம் என்ற மைய கருத்தும் அதை சொல்ல முற்பட்ட விதமும் நன்றாகவே பயன்பட்டிருக்கிறது. அதைவிட முக்கியமாக ஒரு கருத்தையும் இங்கு சொல்லி இருக்கிறார்கள் அது என்னவென்றால் நம் நாட்டின் மீடியாவின் உண்மை தன்மை. அவர்கள் அனைவரும் வியாபார நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறார்கள்  அவர்களுக்கு வியாபாரம் ஆகாத விசயங்களை பற்றி ஒரு துண்டு செய்தி கூட போடுவதில்லை என்ற கருத்து தான்.

படத்தில் பன்னாட்டு நிறுவங்கள் பற்றியும் அதன் முதலாளிகள் பற்றியும் குறிப்பாக அரசியல் பற்றியும் விஜய் பேசும் வசனங்களை பேசும் தைரியம் கண்டிப்பாக விஜயகாந்த் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது என்னுடைய எண்ணம். இவ்வளவு தைரியமாக பேசிய விஜய்க்கு ஒரு சபாஷ்.

என்ன தான் படம் முழுக்க பன்னாட்டு நிறுவங்களின் அக்கிரமங்கள் பற்றி பேசினாலும் இந்த படத்தின் தயாரிப்பாளரே ஒரு பன்னாட்டு நிறுவன அதிபர் தானே ஏன் நம் நாட்டு ஒரு சிறு தயாரிப்பாளரை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. இருந்தாலும் இது பட விமர்சனம் என்பதால் இத்துடன் முடித்துகொள்கிறேன்.

கத்தி - விவசாயிகளுக்காக நவீன சினிமா சார்பில் ஒலித்த முதல் குரல்.....

 













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக