ஞாயிறு, 24 மே, 2020

வலைபாயுதே

"ச்ச!", வீசி எறிந்த அலைபேசி ஒரு குதி குதித்து நீள் சாய்வு இருக்கையின் மறு மூலைக்குச் சென்றது.

அதைச் சற்று கோபத்துடன் வெறித்து பார்த்துக்கொண்டு எதிர் முனையில்  ரஞ்சித்.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த குருவின் வாயில் இருந்து வந்த குழல் ஓசை “உ .. ஊ...” ரஞ்சித்தை 'என்ன' என்று வினவியது.

'எதுவும் இல்லை', தலையை மட்டும் அசைத்தான் ரஞ்சித்.

ஒரு பெரிய "ஊஊஊ..." அடித்துவிட்டு தன் அறைக்குள் சென்றான் குரு.

சற்று நேரத்தில் அலுவலக உடையில் இருந்து கால் சராய்க்கு மாறி வெளியே வந்தான்.

"புது மாப்ள! விட்டத்தை பாத்துகிட்டு உட்காந்திருக்க. உன் ஆளு காட்சி தர்றாங்களா?"

ரஞ்சித்தின் கழுத்து இல்லை என்று அசைந்தது.

"என்னங்கடா இது புது மாப்பிள்ளைக்கு வந்த சோதனை? என்னாச்சு ரெண்டு வாரத்துல கல்யாணம். இவளோ சோகமா இருக்க?"

ரஞ்சித்தின் அருகில் வந்து அவன் தோளில் ஆதரவாக தட்டிக்கொடுத்தான்.

"ஒன்னும் இல்லை ஜி. சும்மா தலை வலிக்கிது".

"சரி விடு, ரொம்ப பர்சனலா இருந்தா வேண்டாம். வா ஒரு டீ அடிச்சுட்டு வருவோம்"

"இல்லை ஜி கொஞ்சம் டயர்டா இருக்கு?"

"யோவ் வாயா, சும்மா தலை வலிக்குதுன்னு வீட்டுக்குள்ளையே இருந்தா ரொம்ப வலிக்கும். பீச் வரை போயிட்டு வருவோம்."

சலிப்புடனே ரஞ்சித் மறு மூலையில் கிடந்த அலைபேசியைத் தன் கால்சராயின் பையில் எடுத்துத் திணித்தான்.

அரை மையில் தூரம் அமைதியாகவே நடந்து சென்றனர். அழகிய பாசிரிஸ் பூங்காவின் ஆரம்பத்தில் விளையாட்டு பூங்கா. குழந்தைகள் எந்த கவலையும் இல்லாமல் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தனர்.

கடற்கரை ஓரம் நீண்ட சாலை, மிதிவண்டிகாரர்களாலும் ஓட்டம் நடை மற்றும் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பவர்களாலும் நிரம்பி வழிந்தது.

ரஞ்சித் ஒரு கல் சாய்வு இருக்கையில் அமர்ந்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.

"என்னப்பா வந்ததுல இருந்து எதையோ பயங்கரமா யோசிக்கிற?"

"அதெல்லாம் ஒன்னுமில்லை ஜி"

"என்னப்பா என்னாச்சு? உன்னை இப்படி பார்த்ததே இல்லையே. எப்பவுமே ரொம்ப கலகலப்பா இருப்ப. ரெண்டு வாரத்துல கல்யாணம் பண்ண போற ஜாலியா இரு."

"எப்படி சொல்றதுன்னே தெரியல? ஒரு பிரச்சனைல மாட்டிருக்கேன் ஜி"

"எதுவும் குடும்பப் பிரச்சனையா? பணப் பிரச்சனையா?

"அதெல்லாம் இல்லை ஜி. போன வாரம் பேஸ்புக்ல ஒரு பொண்ணு ப்ரண்டா ஆட் பண்ணுனா"

"என்னையா.. நிச்சயதார்த்தம் முடிந்த பையனுக்கு வேறொரு பெண்ணுடன் காதலா?"

"நானே பிரச்சனைல மாட்டிகிட்டு இருக்கேன். நீங்க காமடி பண்ணாதீங்க ஜி?"

"அப்பறம் என்ன சொல்லு"

"சாட்ல மெசேஜ் பண்ணுனா. ரிப்ளே பண்ணுனேன்."

"காசா, பணமா ஓசில வந்தா ஒரு கை பாத்துரணும்."

"நக்கல் பண்ணாதீங்க ஜி"

"சொல்லு அப்பறம் என்னாச்சு?"

"மசாஜ் பார்லர் வச்சிருக்கேன் மசாஜ் பண்ணனும்ன்னா. ஸ்பெஷல் டிஸ்கவுன்ட் தர்றேன்னு சொன்னா".

"இதெல்லாம் சொல்லவே மாட்டயே? ஆயில் மசாஜ்ஜா? என்னையும் கூட்டிட்டு போய் இருந்திருக்கலாம்"

 "அதெல்லாம் போகலை, ரெண்டு நாள் கழிச்சு, எனக்குப் பதினாறு வயசு தான் என்னை மாதிரி சின்ன பொண்ணு கிடைக்கிறது கஷ்டம். வெறும் நூறு டாலர் கொடுத்தா போதும் வீட்டுக்கே வர்றேன்னு சொன்னா"

"அடப்பாவி வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டியா?"

"ஐயோ! தயவுசெஞ்சு சொல்லி முடிக்க விடுங்க."

 "இனி நான் மவுனவிரதம்."

"அதெல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டேன் அதுக்கப்பறம் எந்த பதிலும் வரல"

"இன்னைக்கு மதியம் ஒரு கால் வந்துச்சு, அசிங்கமா திட்டி, ஏன்டா உனக்கு பதினாறு வயசு பொண்ணு கேட்குதா? என் மகட்ட என்னென்ன பேசினன்னு எல்லாத்தையும் படிச்சுட்டேன். இதுக்கு சிங்கபூர்ல என்ன தண்டனைன்னு தெரியுமா? உன்னை சும்மா விடமாட்டேன்னு சொல்லி போன வச்சுட்டான்"

"அந்த பொண்ணுட்ட தப்பா பேசுனயா?"

"சத்தியமா உங்கட்ட சொன்னத தான் பேசினேன். அவதான் எனக்கு பதினாறு வயசு, மசாஜ் பண்றேன் அப்படி இப்படின்னு பேசுனா."

"யாரோ உன்கிட்ட ஃபேக் ஐடிய வச்சு சும்மா விளையாடுறான்னு நினைக்கிறேன்?"

"இல்லை ஜி அந்த பொண்ணு கூட நானே ஒருதடவ வீடியோகால் பேசிருக்கேன்”

"அடப்பாவி அது மட்டுந்தானா இல்லை இன்னும் வேறு ஏதாவது இருக்கா?”

"ஒரு ப்ரீ பிட்னஸ் டெஸ்ட், பத்தே பத்து நிமஷம் வீடியோ கால் வாங்கன்னு திரும்ப திரும்ப மெசேஜ் பண்ணுனா அதான் பேசினேன்"

“இதே பையனா இருந்தா பேசிருப்பியா? அவ அப்பன் திரும்ப கால் பண்ணானா?”

"நீங்க வீட்டுக்கு வரமுன்ன ஒருத்தன் பேசுனான், ஜூராங்ஈஸ்ட் போலிஸ் ஸ்டேஷன்லருந்து பேசுறேன். உன் மேல கம்ப்ளைன்ட் வந்திருக்கு. பதினாறு வயசு பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்டா என்ன தண்டனை தெரியுமா? பிரம்படி வாங்க ரெடியா இருன்னு சொல்லிட்டு வச்சுட்டான்."

"எனக்கென்னுமோ உன்னை யாரோ ஏமாத்துறானுங்கன்னு தோணுது. உன் மேல எந்த தப்பும் இல்லை. கோர்ட்டுக்கு போனா கூட உன் பக்கம் தான் சாதகம் ஆகும். நீ ஒன்னும் பயப்படாத"

"கோர்ட்டா? என்ன ஜி பயமுறுத்துறீங்க. எனக்கு ரெண்டு வாரத்துல கல்யாணம் அடுத்த வாரம் ப்ளைட்டு"

"இதெல்லாம் இப்போ தான் உனக்கு தெரியுதா? அந்தப் புள்ளை கூட வீடியோ கால் பண்ணுனப்போ தெரியலையா?"

"ஜீ........" என இழுத்தான். அவன் அலைபேசி அழைத்தது.

"அவனுங்க தான்"

"எடுத்துப் பேசு. பதட்டப்படாத, பயந்த மாதிரி காமிச்சுக்காத"

 பேசி முடித்தான்

"என்ன சொல்றானுங்க"

"பத்தாயிரம் டாலர் கேக்குரானுங்க ஜி"

"பத்தாயிரமா? எதுக்கு?"

"அந்த போலீஸ்காரன் தான் மறுபடி பேசுனான். அந்த பொண்ணோட அப்பாகிட்ட எனக்காக சமாதானம் பேசினானாம். பத்தாயிரம் வெள்ளி பணம் கொடுத்தா சமாதானமா போகலாம்ன்னு சொல்றாராம்."

"அப்பறம் என்ன பத்தாயிரத்தை அவன் மூஞ்சில விட்டெறிஞ்சுரு”

" அவளோ பணம் இல்லையே?"

"இருந்தா குடுத்துருவ? சரியான கேனையா நீ"

"என்ன ஜி திட்றீங்க."

"இது உண்மை மாதிரி தெரியல. எவனோ பணம் புடுங்குறதுக்காக திட்டம் போட்டு ஏமாத்துறான். "

குரு தன்னுடைய அலைபேசியில் தன்னுடைய பழைய வீட்டு உரிமையாளரிடம் பேசினான். அவர் ஒரு காவல்துறை அதிகாரி. இவன் சொன்னதைக் கேட்ட அவர், இதெல்லாம் ஏமாற்றுவேலை உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள் அவர்கள் பார்த்துகொள்வார்கள் என்றார்.

"ஐயோ போலிஸ் கம்ளைன்ட் எல்லாம் வேண்டாம் ஜி"

"எதுக்கு பயப்புடுற.. இவனுங்கள சும்மா விடக்கூடாது. கண்டுபுடிச்சு கம்பி எண்ண வைக்கணும்"

"நிலைமை புரியாம பேசாதீங்க ஜி. அடுத்த வாரம் நான் ஊருக்குப் போகணும். போலிஸ் கம்ளைன்ட் கோர்ட்டு கேசுன்னு அலைய முடியாது. எனக்குப் பயமா இருக்கு. தேவையில்லாம நானே எதுக்கு வம்புல மாட்டணும்."

"இப்போ மட்டும் தேவையோட தான் போய் மாட்டிருக்கியா? இனி அவன் கால் பண்ணினா எடுக்காத"

“திரும்ப திரும்ப அடிச்சா?”

"ஏற்கனவே போலிஸ் ஸ்டேஷன்ல பேசிட்டேன். இதுக்கு மேல மிரட்டுனீங்கன்னா கம்ளைன்ட் பண்ணிடுவேன்னு வேகமா சொல்லிட்டு கட் பண்ணிடு. அவன பேசவே விட்றாத. அப்பறம் ஏதாவது சொல்லி உன்னை குழப்பிடுவான்."

"இதோட விட்டுட்டானுங்கன்னா பரவால்லா ஜி."

"யாருக்கு தெரியும் அட்ரஸ் கொடுத்திருந்தா நாளைக்கு வீட்டுக்கே வந்து நிப்பானுக."

"அட்ரஸ் எல்லாம் கொடுக்கல ஜி. போன் நம்பரே பேஸ்புக்ல இருந்து எடுத்திருக்கானுங்க."

"இப்போ பேஸ்புக்ல உன் போன் நம்பர் போடலைன்னு யார் அழுதா? எல்லா இன்பர்மேஷனையும் போட்டுட்டு கண்டவள ப்ரண்டா ஆட் பண்ணிட்டு அப்பறம் வந்து பொலம்புறது."

"இந்தமாதிரி எல்லாம் பண்ணுவானுங்கன்னு நான் கனவுலகூட நினைக்கல ஜி”

"இன்னும் என்னனென்ன பண்ண போறானுங்களோ? எதுவும் பண்ண கூடாதுன்னு வேண்டிக்க."

"யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ஜி"

"அப்போ சாப்பாடு வாங்கி குடு."

இருவரும் அருகில் இருந்த உணவு விடுதியில் இரவு உணவை முடித்தனர். பின் வீட்டிற்கு திரும்பியதும் அவரவர் அறைக்கு உறங்கச் சென்றனர்.

ரஞ்சித்தின் அலைபேசி அழைத்துக்கொண்டே இருந்தது. இதற்கு மேல் மிரட்டினால் புகார் தந்துவிடுவேன் என்று சீறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அரைமணிநேரம் சென்றது. அவன் பேஸ்புக்கில் அதிர்ச்சிகரமான ஒரு குறுஞ்செய்தி எட்டிப்பார்த்தது.

அது ரஞ்சித் தன் கால்சராயைக் கழட்டி முழு நிர்வாணமாக நிற்கும் காணொளி.

தாங்கள் சொல்வதைச் செய்யாத பட்சத்தில் இந்தக் காணொளியை

அடிக்கடி அவனுக்கு பின்னூட்டமிடும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவனுடைய பெண் தோழிகளின் பேஸ்புக் முகவரிக்கு அனுப்பிவிடுவோம் என்று மிரட்டி இருந்தார்கள்.

அவர்கள் குறிப்பிட்டிருந்தவர்களில் அவன் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்ணின் பேஸ்புக் முகவரியும் இருந்தது. மேலும் தாங்கள் சிங்கபூரிலேயே இல்லை என்றும் எந்த புகாரும் தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்றும் கூறியிருந்தனர்.

அவன் இதயம் சில நொடிகள் துடிக்க முடியாமல் அப்படியே நின்றுவிட்டது. அதிர்ச்சியும் ஆற்றாமையும் அடிவயிற்றில் இருந்து கிளம்பி கண்வழியே கண்ணீராக ஊற்றியது.

பொழுதும் விடிந்தது.

ரஞ்சித் முழங்காலைக் கட்டிக்கொண்டு கீழே அமர்ந்திருந்தான்.

"என்னப்பா ஏன் அழுதுட்டுருக்க? என்னாச்சு?"

ரஞ்சித்தின் விசும்பல் அதிகமானது. தன்னைத் தேற்றிய குருவிடம் இரவில் நடந்ததைக் கூறினான்.

அந்த பெண்ணிடம் தான் காணொளியில் பேசிய போது உடற்கூறு சோதனை என்று கூறி

சட்டை அணியாமல் இருக்கவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும். மேலே பார் கீழே பார் கையைத் தூக்கு இறக்கு என்று சில செய்கைகள் செய்யச் சொன்னதாகவும் சொன்னான்.

ஆண் தானே நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற துணிச்சலில் ரஞ்சித்தும் அதை செய்துள்ளான்.

ஆனால் அந்தக் காட்சிகளை வைத்துகொண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேறு ஒருவன் கால்சராயை அவிழ்க்கும் காட்சியை அதனுடன் இணைத்து விட்டார்கள் என்று கூறி அழுதான்.

"அடப்பாவிகளா?"

"நாளைக்கு மதியம் ஒரு மணிக்கு ஒரு கேஷ் டெபாசிட் மிசின்ல போய் நிக்கணும். அப்போ அவன் கால் பண்ணி அக்கொண்ட் நம்பர் சொல்லுவான். அவன் சொல்லச் சொல்ல அந்த நம்பர நான் மிசின்ல அடிச்சு பணத்தை அனுப்பனும்."

"முன்னாடியே அக்கொண்ட் நம்பர் கொடுத்தாலோ இல்லை உன் அக்கௌண்ட் மூலமா அனுப்பினாலோ அதை வச்சு புடிச்சிருவோம்ன்னு பயப்புடுரானுங்க."

"என்கிட்ட ஆறாயிரம் டாலர் இருக்கு. நீங்க ஒரு நாலாயிரம் மட்டும் கொடுத்தீங்கன்னா தப்பிருவேன் ஜி"

"பத்தாயிரம் கொடுத்தவுடனே விட்ருவான்னு நினைக்கிறயா? அடுத்தடுத்து பணம் கேட்டு மிரட்டிகிட்டே இருந்தா?  இதுவே உன் குடும்பத்துல பெரிய பிரச்சனையா வெடிச்சா?"

"எனக்கு வேற வழியில்லை. அவனுகள நம்பித்தான் ஆகணும்."

"யாரை உன்னை அசிங்கமா கிராபிக்ஸ் பண்ணி அதை வச்சு உன்கிட்ட பணம் புடுங்க நினைக்கிறவனயா? நல்லா யோசி, தங்க முட்டை போடுற வாத்து நீ. ஒரு முட்டை போதும் பொழச்சுபோன்னு விட்ருவான்னு நினைக்கிறயா?"

"தலையே வெடிச்சிரும் போல இருக்கு தூக்கமும் இல்லை அழுகை மட்டும் தான் வருது. நான் என்ன தான் செய்றது?"

"முதல்ல தைரியமா இரு. இப்படிப் பட்ட பிரச்சனைகள்ள மாட்டிகிட்ட பெண்களே தைரியமா சமாளிச்சு வாழ்க்கைய தொடர்றாங்க. அவங்களோட ஒப்பிடும்போது உன்னோடது பிரச்சனையேயில்லை."

"அந்த பொண்ணு ஐடிய கம்ப்ளைன்ட் பண்ணி பேஸ்புக்கு ஈமெயில் அனுப்பு. என் போட்டோகளை திருடி மார்பிங் பண்ணி பணம் கேட்டு மிரட்டுறாங்கன்னு எழுது."

ரஞ்சித் தன் மடிக்கணினியை எடுத்து மின்னஞ்சலை அடித்து அனுப்பினான்.

குரு ஒரு பெண்ணின் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கினான்.

"ஈமெயில் அனுப்பிட்டேன். ஆனால் பேஸ்புக் இந்த ஈமெயில மட்டும் வச்சு அந்த அக்கொன்ட்ட டிஆக்டிவேட் பண்ணுவாங்களா?"

"போலிஸ் கம்ப்ளைன்ட் இல்லாததால ஆக்சன் எடுப்பாங்களான்னு தெரியல. அதேநேரம்

நிறைய பேர் ஒரே கம்ளைன்ட் பண்ணினா நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கு. நம்மளோட ப்ரண்ட்ஸ்கிட்ட ஹெல்ப் கேப்போம்."

"ஜி.. பேஸ்புக் ஆக்சன் எடுக்குறதுக்கு முன்னாடி இவனுங்க அந்த வீடியோவ எல்லாருக்கும் அனுப்பிட்டானுங்கன்னா?"

"அதுக்காக தான் இந்த ஃபேக் ஐடி கிரியேட் பண்ணினேன்"

"நடிகை போட்டோவ வச்சிருக்கீங்க ஒரிஜினல் ஐடின்னு நம்புவாங்களா?"

"எந்தப் பொண்ணால தன்னோட சொந்தப்படத்தை போட முடியுது. உண்மையான அக்கௌன்ட்லியே நிறைய பேர் நடிகை போட்டாவதான் போட்ருக்காங்க."

"இந்த ஐடி எதுக்கு ஜி"

"இப்போவாச்சும் கேட்டியே."

குரு அந்த போலி பேஸ்புக் கணக்கின் சுவற்றில்,

"அன்பு நண்பர்களுக்கு வணக்கம், கடந்த சில நாட்களாக நான் அனுபவித்து வந்த மனஉளைச்சலுக்கு இன்று முடிவு கட்டிவிட்டேன்.  என் புகைப்படங்களை என் முகநூலில் இருந்து திருடி அதில் அசிங்கமாக மாற்றங்கள் செய்து என்னிடம் பணம் கேட்டு மிரட்டி கொண்டிருந்த கும்பலிடமிருந்து மீண்டுவிட்டேன்.

'ஆம் போங்கடா உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோங்க' என்று பதில் அனுப்பிவிட்டேன். அவர்கள் மாற்றம் செய்து வைத்திருக்கும் படத்தில் முகத்தை தவிர வேறு எதுவும் நான் இல்லை எனும் போது நான் எதற்க்காக வருந்தவேண்டும். என்னை நம்பாதவர்கள் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அதே நேரம் என்னை போல் வேறு யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே இதைப் பதிவிடுகிறேன்.  இந்த அற்பத் தனத்தை செய்ய அவர்கள் பயன்படுத்திய பேஸ்புக் கணக்கு' - "

என்று,  ரஞ்சித்தை ஏமாற்றிய அந்த பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்கான இணைப்பை போட்டான். மேலும் அந்த பதிவை தன் அலைபேசியில் ஒரு புகைப்படமாக எடுத்து. அதை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தான். இது போலிக்கணக்கு என்று யாரும் கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக. அவன் உருவாக்கிய அந்த போலி கணக்கை முடக்கினான்.

யாரோ ஒரு அபலைப் பெண்ணின் பதிவாக அந்த புகைப்படம் குருவின் பக்கத்தில் மிதந்துகொண்டிடுந்தது.

ரஞ்சித்திடம் இந்தப் பதிவை நேரடியாக உன் பக்கத்தில் பகிர்ந்தால் அவர்களிடம் அகப்பட்டுவிடுவாய் அதனால் உன் நண்பர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பி அந்த பக்கத்தை தடை செய்யச்சொல். முடிந்தால் அவர்களில் முக்கியமானவர்களை தொலைபேசியில் அழைத்து தடை செய்துவிட்டார்களா என உறுதிசெய்துகொள் என்றான்.

இருவரும் அவரவர் அலுவகத்திற்கு விடுப்பை அறிவித்தார்கள்.

மதியம் மணி மூன்றடித்தது. குரு இருவருக்குமான மதிய உணவை வெளியில் சென்று வாங்கி வந்தான்.

"ஜி எல்லார்ட்டயும் கன்பார்ம் பண்ணிட்டேன், ப்ளாக் பண்ணிட்டாங்க"

"நீ உன்னோட பேஸ்புக் அக்கொன்ட்ட டீஆக்டிவேட் பண்ணி மொத்தமா மூடிடு. ஒரு சிம் வாங்கிட்டு வந்திருக்கேன் இனிமேல் இதை யூஸ் பண்ணு . வாட்ஸ்அப் நம்பரையும் மாத்திடு. ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு மட்டும் கொடு."

கடந்த ஒரு வாரம்  ரஞ்சித்துக்கு எந்த தொல்லையும் இல்லை.

"புது மாப்ளை ப்ளைட்டுக்கு நேரம் ஆகிடுச்சு நல்லபடியா போயிட்டு கால் பண்ணுங்க."

"ஜி ஒருவேளை அந்த வீடியோவ இண்டர்நெட்ல விட்டுட்டானுங்கன்னா?"

"அவனோட நோக்கம் உன்கிட்ட இருந்து பணம் பறிக்கிறது. இப்போ அது முடியாது, வேரெவனாவது சிக்குவானான்னு தேடிக்கிட்டு இருப்பானுக. உன் வீடியோவ இண்டர்நெட்ல ஷேர் பண்றதெல்லாம் அவனுக்கு டைம் வேஸ்ட். நிம்மதியா ஊருக்கு போய் கல்யாண வேலைய கவனி."

விமானத்தில் ....ரஞ்சித் அருகில் இருந்தவரின் அலைபேசித் திரை  கண்ணில் பட்டது. அதில் அதே பெண்ணின் படத்தோடு பேஸ்புக் நட்பு அழைப்பு இருந்தது.

உறுதி செய்வதற்கான பொத்தானை அழுத்த தன் கையை கொண்டு சென்றார் அந்த நபர்.

தன்னை அறியாமல் மிக வேகமாக அவர் கையை பிடித்து தடுத்தான் ரஞ்சித்.

அவர் என்ன என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்தார்.

"ப்ளைட் டேக் ஆப் ஆக போகுது ஜி. மொபைல ஆப் பண்ணுங்க" என்றான்.

அவர் அவனை பார்த்து ஒரு தெளிவான புன்னகையை வீசினார்.

புரிந்து கொண்டிருப்பாரோ? எப்படியிருந்தால் என்ன சபலப்படும் போது தடுத்தாயிற்று என்கிற நிம்மதி .

விமானம் ரன் வேயில் ஊர்ந்து 'விர்'ரென்று மேல் எழும்பியது.

- ஜெயக்குமார்

இக்கதையை வெளியிட்ட சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழுக்கு நன்றி.

குப்பை - தனிமை

தொட்டிக்குள் அடைத்தவுடன் கப்சிப்பென்று அமைதியடைந்தன
சற்றுமுன் சரேல் சரேல் என தனிமையின் வெறுமையில்
கத்தி ஓடிய சருகுகள்...

ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒரு கூடைக்
குப்பைகளை தன்னுள் கொட்டிக் கொண்டே செல்கிறது
பயணிகளற்ற அந்த ஒற்றைத் தொடர்வண்டி...

குடலைத் தோண்டி எடுக்கும் நெடி எந்த பக்கம் நுழைந்தாலும்
எல்லாப் பக்கமும் அணை போட்டுத் தடுக்கும்
வல்லமை கொண்ட எஃகு மூக்கன் அவன்...

அந்த வீதியில் உள்ள அத்தனை முகமும் 
அவனுக்கு பரிச்சியம்...  
எந்த முகமும் அவனுக்காக செலவழித்ததில்லை ஒரு நிமிடம்...

எப்போதாவது கிடைக்கும் ஓய்வுநேரத்தின்
தனிமையின் கொடுமையை போக்க அவனைச்
சுற்றி சுற்றி வரும் கரப்பான்பூச்சியே அவன் உற்ற நண்பன்...

- ஜெயக்குமார்

அறம் - சிறுகதை விமர்சனம்

சிங்கபூர் எழுத்தாளர் கழகம் மாதாந்திரம் நடத்தும் கதைக்களப் போட்டியில் முதல் பரிசு பெற்ற விமர்சனம்.

உலகத்திற்கான பொது அறம் மட்டுமில்லாமல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறம் இருக்கிறது. அப்படி ஒரு எழுத்தாளன், ஒரு வியாபாரி மற்றும் அந்த வியாபாரியின் மனைவி, இவர்களின் அறம் பற்றி பேசுகிறது ஜெயமோகனின் அறம்.

படிக்க ஆரம்பிக்கும் போதே இது ஒரு உண்மைக்கதை என்பதை புரிந்துகொள்ள முடியும். பாதிக்கபட்டவரே கதை சொல்ல தொடங்குகிறார். என்னதான் புகழ்பெற்ற எழுத்தாளர்களாக இருந்தாலும் சிலரைத் தவிர மற்ற அனைவரும் பொருளாதாரத்தில் பின்தங்கியே உள்ளனர். இவரும் இப்படி பின்தங்கிய நிலையில் உள்ள ஒருவர் தான். 

தன் குடும்ப சூழலை முன்னிட்டு ஐயாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஒரே வருடத்தில் நூறு புத்தகங்களை எழுதி முடிக்கும் சவாலான காரியத்தை ஒப்புக்கொள்கிறார். ஒப்புக்கொண்டதை செய்தும் முடிக்கிறார்.

அவர் புத்தகங்களும் அடுத்தடுத்து பல பதிப்புகள் கண்டு அமோக விற்பனையும் ஆகிக்கொண்டிருக்கிறது. அதற்கு சம்பளமாக அப்பப்போ எழுத்தாளர் குடும்பத்தின் பசியை போக்க நூறு இருநூறு மட்டுமே கொடுத்துகொண்டிருந்த பதிப்பக உரிமையாளர் மொத்த தொகையையும் கொடுத்து முடிக்கவில்லை.

எழுத்தாளரும் எவ்வளவு பணம் தன்னிடம் வந்தாலும் தன் வறுமைக்கு அது இரையாகிவிடும் என்ற அச்சத்தில் பாக்கி மூவாயிரம் ரூபாயை பதிப்பக உரிமையாளரிடமே விட்டு வைத்துள்ளார்.

ஒருநாள் எழுத்தாளரின் மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது. தன் பணத்தை பெற பதிப்பாளரிடம் ஓடி வந்தவருக்கு ஏகவசனமும் ஏமாற்றமும் மட்டுமே கிடைத்தது. கத்திப்பார்த்தார் கெஞ்சிப்பார்த்தார் காலிலும் விழுந்தார் ஒரு பலனும் இல்லை. ஓரிரவு முழுவதும் கடை வாசலில் காத்துக்கிடந்தார் மறுநாள் மீண்டும் காலில் விழுந்து கதறிப்பார்த்தார் அப்போதும் எந்த பலனும் இல்லை.

கொதித்தெழுந்தார் கோபத்துடன் பதிப்பாளரின் வீட்டுக்கு சென்றார்.  பதிபாளரின் மனைவியிடம் நடந்ததைக் கூறினார். கோபத்தின் உச்சமாக உங்கள் குலத்திற்க்கே சரஸ்வதி கடாட்ச்சம் இல்லாமல் போகட்டும் என்று சபித்தார். சாபத்தின் உச்சமாக  "அறம் வெண்பா" ஒன்றை அந்த இடத்திலேயே ஒரு துண்டு காகித்தில் எழுதி பதிப்பாளர் வீட்டுக் கதவில் ஒட்டிச் சென்றுவிட்டார்.

இலக்கியம், வெண்பா பற்றியெல்லாம் எதுவும் தெரியவில்லை என்றாலும் தன் கனவன் செய்தது மாபெரும் தவறு என்பதை உணர்ந்துகொண்ட பதிப்பாளரின் மனைவி. தன் கனவன் கடைக்கெதிரில் தார் சாலையில் கொதிக்கும் வெயிலில் தர்ணா போராட்டத்தில் இறங்குகிறார்.

பின் பதிப்பாளர் பணத்தைக் கொடுத்தாரா? எழுத்தாளரின் மகள் திருமணம் நடந்ததா? இதெல்லாம் மீதிக்கதை.

எழுத்தாளர் என்றாலே சினிமா வசனங்கள் எழுதி பல லட்சங்கள் சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள் என எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு. அன்றாடம் வயிற்றுப் பாட்டுக்கே அல்லோலப்படும் படைப்பாளிகள் இருந்தார்கள் இருக்கிறார்கள் என அழுத்தமாக சொல்கிறது இந்த அறம்.

"அங்கே இங்கே என கடன் வாங்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் ஒரு வியாபாரியிடம், திடீரென மூவாயிரம் கொடு" என்று கேட்டது தன்னுடைய தவறு என எழுத்தாளர் உணரும் போது வியாபாரியின் அறத்தை நமக்கும் உணர்த்தி விடுகிறார்.

ஆனாலும் தலையில் கனமெறிய வியாபாரி தன் ஏச்சாலும் பேச்சாலும் விரட்டியடிக்கும் போது எழுத்தாளர் எதிர்வினையாக தன் அறத்தை சாப வெண்பாவாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியில் இன்னோருவர் துன்பம் போக்க அறவழியில் கொதிக்கும் வெயிலில் தார் சாலையில் சென்று அமர்ந்தாளே அந்தப் பெண் அவளின் அறமே சிறந்தது என கதையை முடிக்கிறார்.

உண்மைக் கதையின் உண்மைத் தன்மைக்காக எழுத்தாளரின் ஏழ்மையை விளக்க சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டிருப்பது மட்டுமே எனக்கு நெருடலாகப் பட்டது.

மற்றபடி அறம் அழுத்தமாக பல அறங்களை நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

- ஜெயக்குமார்